நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே
மாதம் 17 – 19 ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின்
பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று
முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில்
கூடுகிறது என்று அதன் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு
செய்யப்பட்ட அனைவருக்கும் முதற்கண் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின்
முதலமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே மாதம் 17 – 19 ஆம்
திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில்,
அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க
சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடுகிறது என்பதனை தாயக,
தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு அறியத்தருவதில் நாம் பெரு
மகிழ்வடைகிறோம்.
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடித்து விட்டதாக
இறுமாப்படைந்திருக்கும் சிங்கள இனவாதப்பூதத்துக்கு நாடு கடந்த ஈழத் தமிழர்
தேசம் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்துக்கு தன்னைத்
தயார்ப்படுத்தியுள்ளது என்ற செய்தியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
முதலமர்வு எடுத்தியம்புகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையானது தனது முதலமர்வினை
அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைத்து, இவ் அரசாங்கத்துக்கான அரசியலமைப்பு
(Constitution) உருவாக்கும் அரசியலமைப்புக்குழுவினை அமைத்துக் கொள்ளும்
எனவும் அரசியலமைப்பினை உருவாக்கி முடியும் வரையிலான காலப்பகுதியில்
செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒரு இடைக்கால நிறைவேற்றுக்குழுவினையும்
அமைத்துக் கொள்ளும் எனவும் மதியுரைக்குழுவின் அறிக்கை பரிந்துரை
செய்திருந்தது.
மேலும், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர, குறுங்கால
திட்டங்களினை முன்னெடுப்பதற்காக பொருத்தமான அமைச்சுக்
கட்டமைப்புக்களினையோ, சட்டவாக்க குழுக்களினையோ உருவாக்குவதனையும்,
இடம்பெயர்ந்த மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விடயங்களைக்
கையாள்வதற்காக ஒரு செயற்பாட்டணி அமைக்கப்படுதல் பற்றியும் முதலாவது அமர்வு
கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் மதியுரைக்குழு அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை நாடு
கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை அமர்வுக்கு அழைத்து,
மேற்குறிப்பிடப்பட்ட மதியுரைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசவை
நிகழ்வுகள் நடைபெறும் வழிவகைகளை மேற்கொண்டு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட
பிரதிநிதிகளிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நடத்திச் செல்லும்
பொறுப்பை ஒப்படைக்கும் வரை முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை
அங்குரார்ப்பணக்குழு சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் நடராஜா
சிறீஸ்கந்தராஜா அவர்கள் பொறுப்பேற்று ஒருங்கிணைத்து வருகிறார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்காக நாம் எடுத்து வந்த
முயற்சிகளில் மிகுந்த சவால்களைத் தாண்டியே முன்னேறிச் செல்ல
வேண்டியிருந்தது. இச் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவதற்காக
மதியுரைக்குழுவும் நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களும் மிகுந்த
அர்ப்பணிப்போடு செயற்படவேண்டியிருந்தது. வீண்பழிகளையும், அவதூறுகளையும்,
சில அவமானங்களையும் தாண்டித்தான் இவர்கள் தமது பணியினை
முன்னெடுத்திருந்தார்கள். இவர்களின் துணிச்சலான செயற்பாடுதான் நாடு கடந்த
தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்துக்கு வழிகோலியது. இச்
செயற்பாட்டாளர்களுக்கு இத் தருணத்தில் எமது வாழ்த்துக்களையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான எமது பணியினை
முன்னெடுப்பதற்கு சில ஊடகங்களின் இருட்டடிப்பு மற்றும் அவதூறுப்
பரப்புரைகளுக்கு மத்தியிலும் பல தமிழ் ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக
இருந்து வந்தன. இவ் ஊடக நண்பர்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடனும்
தோழமையுணர்வுடனும் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.
இத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமன்றி வேட்பாளர்களாகப்
போட்டியிட்ட அனைவரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை
வளர்த்தெடுப்பதற்கு தமது பங்களிப்பை வழங்க முன்வந்தவர்களாகவே நாம்
கருதுகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுப்பதற்கான பங்களிப்பை இவர்கள் தொடர்ந்தும் வழங்குவார்கள் என நம்புகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகளாக நேரடித்
தேர்தல்கள் மூலம் 115 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது நன்றென மதியுரைக்குழு
பரிந்துரை செய்திருந்தது.
இவர்களில் 87 பிரதிநிதிகள்,
கனடா (25),
அமெரிக்கா (10),
பிரித்தானியா (17),
சுவிற்சலாந்து (10),
பிரான்ஸ் (7),
ஜேர்மனி (3),
நோர்வே (3),
டென்மார்க் (3),
சுவீடன் (1),
அவுஸ்திரேலியா (6),
நியுசிலாந்து (2)
ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை தெரிவு செய்யப்;பட்டுள்ளார்கள்.
இத்தாலி (3),
Benelux (நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸ்;சம்பேர்க்) (3),
பின்லாந்து (1),
அயர்லாந்து (1)
ஆகிய நாடுகளிலில் இருந்து தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படவேண்டிய 8
பிரதிநிதிகளின் தெரிவு சில நடைமுறைப் பிரச்சினைகளால் அடுத்த
கட்டத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
பிரித்தானியா (3),
பிரான்ஸ் (3)
ஆகிய நாடுகளில் இடம் பெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் தொடர்பான
முறைப்பாடுகள் குறித்த நடவடிக்கைகளால் மேலும் 6 பிரதிநிதிகளின் தெரிவும்
தாமதமாகின்றது.
ஜேர்மனியின் இரு தேர்தல் தொகுதிகளில் தேர்தல்களை பொது நிறுவனம் ஒன்று
பொறுப்பெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையால் அங்கு இன்னும்
தெரிவு செய்யப்படவேண்டிய 7 பிரதிநிதிகளுக்குரிய தேர்தல்கள் யூன் மாதம் 20
ஆம், 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இருந்தும் நியு சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில்
இ;ருந்து 4 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளனர். இவ்வகையில்
இன்னும் 25 பிரதிநிதிகள் நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ
அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இவற்றை விட, தென்னாபிரிக்காவில் நேரடித் தேர்தல் மூலம் தெரிவு
செய்யப்படுவதற்கு மதியுரைக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட 3
பிரதிநிதிகளின் தெரிவு நேரடித் தேர்தல் தவிர்ந்த வேறுமுறையில்
மேற்கொள்ளப்படுவதே நடைமுறையில் பொருத்தமானது என்ற தமது கருத்தினை
தென்னாபிக்கா செயற்பாட்டுக்குழு எமக்குத் தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் எல்லோரையும் ஒரு
முறையிலேயே தேர்ந்தெடுக்க முடியாது போனாலும், தேர்ந்தெடுக்கப்பட
வேண்டியவர்களில் முக்கால் பங்குக்கும் மேற்பட்டவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், மே மாதம் 17-19 ஆம் திகதிகளின் கால
மற்றும் குறியீட்டு முக்கியத்துவம் கருதி நாம் முன்னர் அறிவித்தவாறே அக்
காலப்பகுதியில் முதலாவது அமர்வினைக் கூட்டுவது அவசியமானதென நாம்
கருதியமையினால் திட்டமிட்டவாறு முதலமர்வு இப்போது கூட்டப்படுகிறது.
இயன்றளவு விரைவாக ஏனைய பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவதற்கு ஆவன
செய்யப்படும்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை அவ்வவ் நாடுகளின் தேர்தல்
ஆணையங்களே கையாள்கின்றன. நியாயமான முறையில் இவை கையாளப்பட்டு, இவை
தொடர்பான ஒரு வெளிப்படையான அறிக்கைகையை உரிய தேர்தல் ஆணையங்கள் மக்களுக்கு
வெளியிடுவார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பு.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களில், தேர்தல் ஆணையம் மற்றும்
தேர்தல் குழுக்களில் பணியாற்றுபவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும்
வேட்பாளர்களாகப் பங்கு பற்றலாம் என்பதே பொதுவான ஏற்பாடாக இருந்தது.
இருந்த போதும் சில நாடுகளின் செயற்பாட்டுக்குழுக்கள் இவ்வாறு தேர்தலில்
போட்டியிடுவோர் செயற்பாட்டுக்குழுவில் இருந்து விலக வேண்டும் என்ற
நடைமுறையினைத் தமக்குள் பின்பற்றியிருந்தனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான இடைக்கால நிறைவேற்றுசபை
உருவாக்கப்பட்டு அச்சபை கடமைகளைப் பொறுப்பேற்கும் போது நாடு கடந்த தமிழீழ
அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவும் நாடுவாரியான
செயற்பாட்டுக்குழுக்களும் தமது பணிகளை நிறைவுக்குக் கொண்டு வரும்.
– இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
ஈழநேசன்